கடந்த சில நாட்களாக என்னிடம் பல நபர்கள் கேட்ட கேள்வி எதாவது காதல் தோழ்வியில் கஷ்டப்படுகிறேனா என்று? அவர்கள் கேட்டதற்கான காரணம் என்னுடைய தோற்றம். சவரம் செய்யப்படாத தாடி, அடர்ந்த முடி. இவை போதாதா நம் தமிழ் சினிமா கற்று கொடுத்த யூகங்கள். கடந்த மூன்று மாதமாக நான் முடி வெட்டவில்லை. அதை போல கடந்த ஒரு மாதமாக சவரம் செய்யப்படாத முகத்துடன் காணப்படுகிறேன். தாடி சற்று அதிகமாகவே என் முகத்தில் ஆக்கிரமித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு இறை வேண்டுதலுக்காகவே இந்த தோற்றம். வரும் திங்கள் கிழமை என் குலதெய்வம் கோவிலில் மொட்டை போடப்போகிறேன். வெயிலுக்கு சற்று இதமாகவே இருக்கும். சென்னையில் வெயில் வாட்டி கொண்டிருக்கிறது. இந்த இறை வேண்டுதலுக்கான காரணத்தை எழுத நினைக்கிறேன். கடந்த வருடம், ஜூலை மூன்றாம் தேதி நான் தவறி விழுந்ததில் என் முன் பல்லில் பலத்த காயம் ஏற்பட்டது. என் குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்ணீரையும் பார்த்த நாள். அவர்கள் மேலும் கஷ்ட படகூடாது என்பதற்காக என்னில் இருந்த வழியை யாரிடமும் காட்டவில்லை. என் அக்கா அழுததை பார்த்து எங்கள் வீட்டு செல்ல பிள்ளை லோக்ரஞ்சன் அழுததை நினைத்தால் இப்பொழுது கூட மனம் கஷ்டப்படும். என் அக்கா என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். முதலில் சென்ற பல் மருத்துவமனையில் பல்லை எடுத்தாக வேண்டும் என்று சொன்னதும் என் அக்கா தேம்பி தேம்பி அழுதாள். சரி வேறு வழி இல்லாமல் நான் சம்மதம் தெரிவித்தேன். சரி நிலைமையை என் அத்தானிடம் சொன்னதும் அவர்கள் செங்கல்பட்டிலிருந்து தியாகராய நகரில் உள்ள மருத்துவமனைக்கு கிளம்பி வந்தார்கள். என் அத்தான் வரும் வரை காத்திருப்போம் என்று நானும் அக்காவும் முடிவு செய்தோம். முதலுதவியாக ஒரு ஊசி மட்டும் போட்டனர். மீனாக்ஷி பவனில் மதிய உணவை நானும் அக்காவும் சாபிட்டோம். உண்மையில் என்னால் சாப்பிட கூட முடியாத அளவு வலி. இருந்தாலும் என் அக்கா முன்னாடி அதை காட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்தேன். நான் எப்படி கஷ்டபடுகிறேன் என்று அவளால் உணரமுடிந்தது. என் அத்தானும் வந்து சேர்ந்தார்கள். மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்பு என் அத்தான் பல்லை அகற்றாமல் மருத்துவம் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் முடியாது என்று மறுத்துவிட்டார். சரி என் அத்தான் இன்னொரு மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு முயற்சி செய்யலாம் என்று சொன்னவுடன், என்னை அழைத்து கொண்டு சென்று அந்த மருத்துவரை பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த மருத்துவர் ஆந்திர எல்லையில் இருக்க கூடிய சித்தூரில் இருக்கிறார். சென்னையில் இருந்து பயணம் செய்தால் குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஆகும். இடையில் அப்போல்லோ பல் மருத்துவமனை விளம்பர பலகையை பார்த்தோம். நேரம் ஆக ஆக என் பல் கீழே விழுவது போலவே எனக்கு தோன்றியது. என் உதடுகள் எல்லாம் வீங்கி வறண்டு இருந்தது. சரி அப்போல்லோ பல் மருத்துவமனையில் தலைமை மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என்று முடிவு செய்து அங்கே சென்றோம். தலைமை பல் மருத்துவர் பெயர் தரிதா ராம். அவர் வேறு ஒருவருக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்ததால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவர் பெயர் நமீதா. அவரும் எக்ஸ்ரேயை பார்த்து விட்டு பல்லை அகற்றுவது தான் ஒரே வழி என்றார். என் அத்தான் தலைமை மருத்துவரையும் ஒரு முறை பரிசோதித்து சொல்ல அந்த மருத்துவரிடம் கேட்டதும், தலைமை மருத்துவர் வந்து பரிசோதித்து முயற்சி செய்யலாம் என்றார். பல்லில் பின்னல் உள்ள சதை வலிமையுடன் இருப்பதாக சொன்னார். உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று கட்ட சிகிச்சைக்கு பின்பு, எனது முன் பல் சரி செய்யப்பட்டது. இப்பொழுது மருத்துவ ஆலோசனைப்படி முன் பல்லில் ரொம்பவும் கடினமான அழுத்தம் குடுக்காமல் பழகிக்கொண்டேன். நான் அந்த தலைமை மருத்துவர் தரிதா ராமிற்கு என்று கடமை பட்டவன். அந்த மருத்துவரிடம் உள்ள நல்ல குணம், எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்று பேசுவார். அந்த தருணம் மட்டும் என் அத்தான் மருத்துவமனைக்கு வராமல் இருந்திருந்தால், என் முன் பல் அகத்ற்ற பட்டு செயற்கை பல் பொறுத்த பட்டிருக்கும். எல்லாம் நல்ல படியாக முடிந்ததற்காக தான் இந்த இறை வேண்டுதல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment