சிவாஜி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எல்லோரிடம் நிலை கொண்டிருக்க, நானும் அந்த படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்று ஆவல் இருந்தது. சரி பதிவு செய்து படம் பார்க்கலாம் என்று திரையரங்குளுக்கான இணைய தளத்திற்கு சென்று பார்த்தால், எங்கும் கிடைக்கவே இல்லை. சரி திரைப்படம் வெளியான இரண்டு வாரம் கழித்து பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு 7 மணி போல லக்ஷ்மணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாப்ளே, சிவாஜி படத்திற்கு 2 டிக்கட் இருக்கு, போகலாமா? என்றான். சரி என்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் விடை பெற்று கொண்டு, கேசவன், நான் மற்றும் லக்ஷ்மணன் படத்துக்கு போவதற்கு தயாரானோம். நங்கநல்லூர் வெற்றி திரையரங்குக்கு பதிவு செய்திருந்தோம். மூவரும் ஒரே வண்டியில் பயணம் செய்தோம். நல்ல வேளை, போக்குவரத்து காவல் துறையினரிடம் பிடிபடவில்லை. திரையரங்கின் தெரு முனையிலே கூட்டம் அலை மோதியது. நம்மிடம் தான் பதிவு செய்த டிக்கெட் இருக்கிறதே என்று கூட்டம் இருந்த திசை நோக்கி நடந்தோம். இருக்கும் கூட்டத்தை பார்த்தால், திரையரங்கின் நுழைவு வழி அருகே இருந்தால் தான் உள்ளே போக முடயும் என்றும் முந்தியடித்து கொண்டு நுழைவு வாயில் அருகே சென்றோம். நுழைவு வாயிலை திறந்தால் நாங்கள் முதல் அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணம் மட்டுமே எங்கள் முன்னே இருந்தது. சுமார் 45 நிமிடமாவது அங்கே நின்று கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து அந்த திரையரங்கில் வேலை பார்ப்பவர் எங்கள் சீட்டை பார்த்து, நீங்கள் போக வேண்டிய திரையரங்கு இது அல்ல...பக்கத்தில் உள்ள திரையரங்கு என்றார். எங்களுக்குள் சிரிப்பு அடக்கவே முடியவில்லை......ஏனென்றால் எங்களுக்குளே யார் முதலில் உள்ள போவார்கள் என்ற போட்டி வேறு....சரி என்றும் பக்கத்தில் உள்ள திரையரங்கிற்குள் போனாள், அங்கே கூட்டத்தை கட்டு படுத்த காவலாளிகள் எல்லாம் பனியில் இருந்தனர். பின் அங்கும் ஒரு மணி நேரம் காத்து கிடந்தது அந்த படத்தை பார்த்து முடித்தோம். படத்தில் பிரம்மாண்டம் அதிகம்...ரஜினிக்கே உரிய அந்த ஸ்டைல். மொத்தத்தில் எங்கள் பொழுது நன்றாக கழிந்தது... :)
Friday, October 30, 2009
விஜயகாந்தின் மறைவு - ஒரு சோகமான நிகழ்வு.
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது வீட்டில் இருந்து சென்று வந்தேன். விஜயகாந்தும் என் கல்லூரியில் தான் படித்து வந்தான். அவனும் நானும் அவரவர் வண்டியில் ஒன்றாக செல்வோம். அவன் தமிழ் வழியாக 12(+2) வரை படித்தவன். ஆகையால் அவனுக்கு பொறியியல் பட்ட படிப்பு படிக்கும் பொழுது கஷ்டமாக இருந்தது என்று என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக மோசமானதாக இருக்கும். அந்த சாலையில் (உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சாலையே கிடையாது) கூட விரட்டி அடித்து கொண்டு போவான். என்னால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சமயம் அவனை போக சொல்லி விட்டு வழக்கமான எனது வேகத்தில் வருவேன். நாங்கள் பயணம் செல்ல வேண்டிய 10 கி.மீ நடுவே இரண்டே ஊர்கள் தான் இருக்கும். அது லட்சுமியாபுரம் எனும் புல்லாபட்டி மற்றும் கீழான்மறைநாடு. ஒரு நாள் அவன் வேகமா திரும்பி வருகையில், வந்த வேகத்தில் ஒரு கோழி அவன் வண்டி மீது மோத, எமதர்ம ராஜா அந்த கோழிக்கு பாச கயிறு வீசி விட்டார் போல. ஊர் மக்கள் எல்லாம் அவனை தகாத வார்த்தையில் வாசனை மழை பொழிய நான் கூடத்திற்கு நடுவே சென்று பார்த்தால், மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். எனக்கு தெரிந்தவர் வாயிலாக அவனை அந்த கூட்டத்தில் இருந்து விடுவித்து கூட்டி சென்றோம். அன்றில் இருந்து என் வேகத்திற்கு அவன் மாறி என்னுடன் பயணம் செய்வான். ஏதோ பேசி கொண்டே பயணம் செய்வோம். இப்படியே நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள் கல்லூரி விட்டு திரும்பும் நேரம் சோகமாக இருந்தான். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கவலையாக இருந்தான். சரி என்று இரண்டு பெரும் கிளம்பினோம். வரும் வழியில் சாதரணமாக பேசி கொண்டு வந்தான். நாங்கள் ஆலங்குளம் வந்த பொழுது மணி 6:30 இருக்கும். நானும் அவனும் பிரியும் இடம் வந்ததும் இரண்டு பெரும் விடை பெற்று கொண்டோம். ஆனால் அது தான் கடைசியாக பெறக்கூடிய பிரிவினை என்று எனக்கு தெரியவில்லை. என் அப்பா வேலையில் இருந்து 12 மணிக்கு திரும்பி வந்ததும், என்னை எழுப்பி ஒரு அதிர்ச்சி தகவல் தந்தார் விஜயகாந்த் 6:45 மணிக்கு காலமாகி விட்டதாக. எப்படியும் அவன் வீட்டிற்கு செல்ல குறைந்தது 6:35 மணியாவது ஆகியிருக்கும். இடையில் 10 நிமிடத்தில் ஒருவனுக்கும் மரணம் ஏற்படுவது என்றால் வாழ்கை இவ்வளவு தானோ என்று தோன்றுகிறது. இதற்க்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியாமல்......முடித்து கொள்கிறேன்.
சென்னையில் ஒரு மழை காலம்...
நான் வெளிவர இருக்கும் சென்னையில் ஒரு மழை காலம் திரைப்படம் பற்றி எழுதவில்லை. நேற்று முன்தினம்(28/10/2009) அன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. நான் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருக்கும் பொழுது வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைவது என்பது எனக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எனக்கு மழையில் நனைவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரியில் படிக்கும் பொது என் வீட்டில் இருந்து தான் போய் வந்தேன். அப்பா எனக்கு TVS Champ வாங்கி கொடுத்திருந்தார். ஆலங்குளத்தில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் பாதை மிக மோசமாக இருக்கும். எனது பயணம் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள காட்டு பகுதிக்கு நடுவே தான். கீழராஜகுலராமனுக்கும் செவல்பட்டிக்கும் நடுவே சாலை என்பதே கிடையாது. இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு இருக்கும். எப்பொழுதாவது மழை பெய்தால் மட்டுமே அந்த ஆற்றில் தண்ணீரை பார்க்க முடியும். வேறு வழியாக செல்ல வேண்டும் என்றால் வெம்பகொட்டை வழியாக போகலாம். மழை நேரங்களில் நான் நனைந்து கொண்டே தான் பயணம் செய்வேன். மழைக்காக என்றும் நான் கல்லூரி சென்ற நாட்களில் ஒதுங்கியதே இல்லை. நான் மட்டும் மழையில் நனைந்து கொண்டே செல்லும் பொழுது ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்து கொண்டே பயணம் செய்வதில் இருக்கும் சுகமே தனி தான். அந்த தருணம் எனக்கு நானே இளையராஜா, எனக்கு நானே ஒரு S.P.B ஆக நினைத்து கொள்வேன். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நனைந்திருந்தாலும் கூட.. ஆலங்குளத்தில் உள்ள சங்கரேஷ்வரி டீ ஸ்டாலில் ஒரு டீயும் இரண்டு வடையும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் பொழுது வழக்கமாக என்னிடம் 'தம்பி எங்க படிக்கிறீங்க? உங்க வீடு எங்க இருக்கு?' என்று கடைக்காரன் என்னிடம் கேட்பார். நான் முழுவதுமாக நனைந்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் அம்மா எனக்கு தலை துவட்ட துண்டை வைத்து கொண்டு எனக்காக காத்திருப்பார். வேலை தேடி சென்னை வந்த நாளில் இருந்து, அப்படி ஒரு நாளும் மழையில் நான் திரும்ப நனைந்தது இல்லை அதற்க்கான வாய்ப்பும் கிடைத்தது இல்லை. சென்னையில் மழை என்பதே அரிதான ஒரு நிகழ்வாக உள்ளது. நேற்று முன்தினம்(28/10/2009) நீண்ட நாள் கழித்து மழைகளுக்கு நடுவே பயணம் செய்தது மனதிற்கு சந்தோசமாக இருந்தது. என்ன சங்கரேஸ்வரி டீ ஸ்டாலுக்கு பதிலாக cofee vending machine ல பட்டனை அழுத்தி டீ எடுத்து கொண்டிருக்கையில் இதை எழுத வேண்டும் என நினைத்து இங்கே எழுதிகிறேன். எழுதுவதற்கு நடுவே சில சிரிப்புகள்..... எழுதுவதக்கான காரணமும் என்றோ ஒரு நாள் திரும்பி படிக்கையில் கிடைக்க கூடிய அந்த புன்முறுவலுக்கு தான். :)
Friday, October 23, 2009
லோக்ரஞ்சனின் மழலை குரலில் 'கண்ணே கலைமானே' பாடல்
என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற பாடல் 'கண்ணே கலைமானே'. கண்ணதாசனின் பாடல் வரிகள் ஜேசுதாசின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் சிறந்தவர்கள் என்று சொல்வதற்கு எடுத்துகாட்டாக மூன்றாம் பிறை படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். நேற்று அமெரிக்காவில் இருந்து அக்கா என்னை அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, லோக்ரஞ்சன் பாடுவதை கேளு என்றாள். நான் மிகுந்த ஆவலுடன் கேட்பதற்கு தயாரானேன். எந்த ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன் இறை வாழ்த்து சொல்வது வழக்கம். அதை போல லோக்ரஞ்சன் முதலில் 'ஓம் பூர் புவ ஸ்வாகா' மந்திரத்தை கொஞ்சும் மழலை தமிழில் சொன்னான். 25 வயதான எனக்கே அந்த மந்திரம் தெரியாது. அடுத்ததாக 'chubby cheek' னு ஒரு rhymes சொன்னான். நடுவே அக்காவின் குரல் மாமாவிற்கு 'கண்ணே கலைமானே' பாட்டு பாடு குட்டின்னு சொன்னதும், அந்த இன்னிசை ராகம் ஆரம்பித்தது. ஒரு பாடல் கேட்க சுருதி, ராகம், சரியான பாடல் வரிகள் எல்லாம் இருந்தால் தான் கேட்க இனிமையாக இருக்குமோ என நினைப்பவர்களுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் பாடும் பாடல் தவறு என்று உணர்த்தும். அதையே லோக்ரஞ்சன் உறுதி படுத்துவது போல அழகாக பாடினான். லோக்ரஞ்சன் பிறந்த 2-3 மாதத்திலே இரவு தூங்குவதற்கு பாட்டு பாடினால் தான் தூங்குவான். அம்மா, அப்பா மற்றும் அக்கா என்னை பாட சொல்லுவார்கள். நான் பாடி அவன் தூங்கிய நாட்களை விட தூங்காத நாட்கள் தான் அதிகம். அவனுக்கு தொலைபேசியில் பதிவு செய்திருக்கும் பாட்டை போட்டு தூங்க வைப்போம். என் அப்பா மிக அருமையாக பாடுவார். ஆனால் பாட சொன்னால் லோக்ரஞ்சனுக்கு நான் பாடும் பழைய பாட்டு எல்லாம் பிடிக்காது என சொல்வார்கள். ஆனால் என் அப்பாவின் குரலுக்கு நான் என்றும் கேட்க விருப்ப படுவேன். என் அப்பா அடிக்கடி பாடும் பாடல் 'எங்கள் திராவிட பொன்னாடு' அல்லது 'செந்தமிழ் தென் மொழியாய்' கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அதை போல இனிமையும் மழலையும் கலந்து பாடும் லோக்ரஞ்சனின் குரலையும் கேட்க என்றும் எதிர்நோக்கி இருக்கிறேன்...
சென்னையில் சுற்றி திரிந்த நாட்கள்...
ப்ராஜக்ட் செய்ய சென்னை வந்திருந்த பொழுது நடந்த சில நினைவுகள். அப்பொழுது மனதில் கவலை எதுவும் தெரியாதவர்களாய் இருந்த நாட்கள். ஷாலோம் ஆண்கள் தங்கும் ஒரு குடியிருப்பில் தங்கி இருந்தோம். வாழ்கையை தேடி சென்னை வந்து தங்கிருந்தவர் மத்தியிலே நாங்கள் இருந்தோம். ஒரு மாதத்திற்கு 8 நபர்கள் தங்க 4000 ரூபாய் கொடுத்து தங்கியிருந்தோம். நாங்கள் ப்ராஜெக்ட் செய்ய போன நாட்களை விட வெளியில் சுற்றி திரிந்த நாட்கள் தான் அதிகம். கில்லி படம் வெளியான நேரம் அது. ஏற்கனவே அந்த படத்தை பார்த்தாலும் நண்பர்களுடன் சென்னையில் பார்க்க வேண்டும் என உதயம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம். பின்பு மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் எல்லாம் போனது மறக்க முடியாது. நாங்கள் அனைவரும் வளசரவாக்கம் Orbit Data Controls ல ப்ராஜெக்ட் செய்தோம். ஏதோ கடமைக்குன்னு போவோம். மொத்தமாகவே ஐந்து நாள் தான் போயிருப்போம். அப்புறம் காசு கொடுத்து பொருள் வாங்கிற மாதிரி ப்ரொஜெக்டை விலை கொடுத்து வாங்கி வந்தோம். இடையில் சென்னையை சுற்றி பார்க்க தான் தினமும் எங்காவது கிளம்பி போவோம். இரவு தூங்குவதற்கு முன்பு யார் தண்ணி குடிக்க போனாலும் அவன் நிலைமை கஷ்டம் தான். எனென்றால் அவன் தான் மற்ற அத்தனை பேருக்கும் தண்ணி பிடித்து குடுக்க வேண்டும். எப்படியும் அவன் அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு 15-20 நிமிடம் ஆகும். ஒரு நாள் மகாபலிபுரம் சென்றோம். வரும் வழியில் கானத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாயாஜால் தியேட்டேர் நுழைவு வாயழுக்கு அருகே சென்றோம். சரி படம் பார்த்து போகலாம் என நினைத்து உள்ளே சென்றோம். மொத்தம் எங்களிடம் இருந்த ரூபாய் நானூறை தாண்டாது. உள்ளே சென்று டிக்கெட் விலை கேட்டவுடன், எங்களுக்கு அதிர்ச்சி. நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என்றனர். எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள திரையரங்குகளில் பொதுவாக அதிக பட்சமே 50 ரூபாவை தாண்டாது. சரி என்று வரும் வழியில் சென்னை முதலை பண்ணை சென்றோம். ஐந்து ரூபாய் தான் நுழைவு கட்டணம். ஒரு மணி நேரம் அங்கு கழிந்தது. பின்பு அந்த பண்ணைக்கு பின்புறம் இருந்த கடலுக்கு பக்கத்தில் போய் விளையாடினோம். கடல் அலைகளுக்கு நடுவே எங்கள் பெயர்களை எழுதி வைத்தோம். எங்கள் பெயரை விட பக்கத்தில் இருக்கும் நண்பன் பெயரையும் அவனுக்கு என்று நாங்களாக உருவகபடுத்தி வைத்திருக்கும் பெண் பெயரையும் எழுதி மகிழ்ந்த நாட்கள் என்றும் இனியது. பின்பு அங்கு இருந்து புறப்பட்டு வீடு திரும்பினோம். பின் ஒரு நாள் சென்னையில் வேலை கிடைத்த பின்பு உதயம் தியேட்டேருக்கு தனியாக சென்றேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் நான் ஒரு நாள் கில்லி படம் என் நண்பர்களோடு பார்த்த அதே இடம். ரவி, விஜி, கோபால் அமர்ந்து இருந்த இடத்தில் வேறு யாரோ இருக்க ஒரு வித நன்றி இறைவனுக்கு எனக்கு அதே இருக்கை கொடுத்ததற்கு. இன்றும் நடேசன் தெருவில் பாய் கையேந்தி கடையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சாபிட்டத்தை நினைத்தால் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. இதை எழுதுவதன் நோக்கம் என்றோ ஒரு நாள் திரும்பி படிக்கையில் கிடைக்க கூடிய சந்தோஷத்திற்கு தான்.
Thursday, October 22, 2009
சென்னை முதல் நாள் அனுபவம்...
நான் மற்றும் எனது நண்பர்கள் சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்வதற்க்காக சென்னை வந்தோம். மாலை ஆறு மணிக்கு விருதுநகரில் இருந்து பேருந்தில் கிளம்பினோம். சென்னை வந்து சேர அடுத்த நாள் மதிய வேளை நெருங்கி விட்டது. ஏற்கனவே தங்குவதற்கு ஒரு அறை இருக்கிறது என்று மிதப்பில் வந்து இறங்கினோம். சற்று அதிர்ச்சியான தகவல் நாங்கள் தங்கவிருந்த அறை வேறு யாருக்கோ கொடுத்தாகி விட்டது என்று கேட்டவுடன். சரி வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கும் தருணத்தில் லக்ஷ்மணனை அவங்க அப்பாவின் தொழில்ரீதியான நண்பரை சென்று பார்க்க சொன்னதும் அங்கே சென்று பார்த்தோம். அவர் உதவியுடன் பாண்டி பஜாரில் உள்ள சரவணா லாட்ஜில் இரண்டு அறை தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் அசதியில் எல்லோரும் நன்றாக தூங்கினோம். எங்களுக்குள் இருந்த ஒற்றுமை கொண்டு வந்த பைகள் எல்லாம் ஒரு அறையில் வைத்து கொண்டு, நாங்கள் எல்லோரும் ஒரு அறையில் படுத்து தூங்கினோம். எனக்கு சுமார் 4 மணி போல பசி அதிகம் எடுக்கவே, எங்காவது போய் சாப்பிட்டு வரலாம் என நினைத்து கிளம்பும் நேரத்தில், என்னை இதை எழுத வைத்த அந்த நகைச்சுவை நாயகன் கோபால கிருஷ்ணனும் எழுந்துவிட்டார். இன்னும் இரண்டு நண்பர்கள் எழுந்திருக்கவே நாங்கள் அனைவரும் சாபிடுவதற்கு வெளியில் கிளம்பினோம். இடையே நமது நகைச்சுவை நாயகர் எங்களை எல்லாம் பயமுறுத்தினார். சென்னையில் எங்களை எல்லாம் ஏமாற்றிவிடுவார்கள் என்று. சரி மதுரை பக்கத்தில் இருப்பவன் ஆச்சே, சற்று விவரம் தெரிந்தவனாக இருப்பான் என்று நினைத்தோம். பெரிய பெரிய உணவகத்திற்கு சென்றால் ஏமாற்றி விடுவார்கள், ஆகையால் நான் சொல்லும் உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று சொன்னார் நம் நகைச்சுவை நாயகர். சரி என்று அவன் பின்னே நாங்களும் தொடர்ந்து சென்றோம். இங்கே போகலாமா என்று எதாவது உணவகத்தை பார்த்து கேட்டால் அவனிடம் இருந்து வந்த ஒரே வார்த்தை ஏமாற்றி விடுவார்கள். சரி என்று நாங்களும் பின்தொடர்ந்தோம். எங்களுது நடை பயணம் ஆரம்பித்த நேரம் 4:30 . எங்கள் நடை பயணம் பாண்டி பஜார் வழியாக ஆரம்பித்து, பனகல் பூங்கா, G.N.செட்டி ரோடு, வடக்கு உஸ்மான் ரோடு, ஹபிபுல்லா ரோடு, திருமலை பிள்ளை ரோடு.....என்று பல ரோடுகள் கடந்து போகவே...நேரமும் சுமார் 6:15 ஆனது. அனைவரும் பொறுமை இழந்து கிடந்தனர். கடைசியாக எல்லோரும் எங்கயாவது சாப்பிட வேண்டும் என முடிவு பண்ணி, கடைசியாக நம் நகைச்சுவை நாயகரிடம் மச்சான் இந்த கடையிலயாவது சாப்பிடுவோம் என்று ஒரு சின்ன கடையை காட்டியதும், சரி என்று ஒப்புதல் வழங்கினார். சரி என்று உள்ளே சென்று சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிடும் பொழுதே அனைவருக்கும் மற்றுமொரு 2 மணி நேர நடை பயணம் இருக்கிறது என்று ஒரு வித சோம்பல் உணர்வு. பசி எனக்கு அதிகமாக இருக்கவே மின்னல் வேகத்தில் சாப்பிட்டு முடித்து வெளியில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு அதே மாதிரி இடத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. சரி என்று கொஞ்சம் தூரம் நடந்து பார்த்தும் எனக்கு தலை கால் சுற்றியது. நாங்கள் சாப்பிட இடம் நாங்கள் தங்கி இருந்த சரவணா லாட்ஜ் ஒட்டியுள்ள சந்தில் இருந்த கடை. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்...இடையில் நடந்த இரண்டு மணி நேர நடை பயணம் அசதி கூட தெரியாமல். இன்னும் பாண்டி பஜார் பக்கம் சென்றால் அந்த சின்ன கடையை பார்க்காமல் வந்ததில்லை. ஒரு சுகமான அனுபவம்.
Subscribe to:
Posts (Atom)