Friday, October 23, 2009

லோக்ரஞ்சனின் மழலை குரலில் 'கண்ணே கலைமானே' பாடல்

என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற பாடல் 'கண்ணே கலைமானே'. கண்ணதாசனின் பாடல் வரிகள் ஜேசுதாசின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் சிறந்தவர்கள் என்று சொல்வதற்கு எடுத்துகாட்டாக மூன்றாம் பிறை படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். நேற்று அமெரிக்காவில் இருந்து அக்கா என்னை அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, லோக்ரஞ்சன் பாடுவதை கேளு என்றாள். நான் மிகுந்த ஆவலுடன் கேட்பதற்கு தயாரானேன். எந்த ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன் இறை வாழ்த்து சொல்வது வழக்கம். அதை போல லோக்ரஞ்சன் முதலில் 'ஓம் பூர் புவ ஸ்வாகா' மந்திரத்தை கொஞ்சும் மழலை தமிழில் சொன்னான். 25 வயதான எனக்கே அந்த மந்திரம் தெரியாது. அடுத்ததாக 'chubby cheek' னு ஒரு rhymes சொன்னான். நடுவே அக்காவின் குரல் மாமாவிற்கு 'கண்ணே கலைமானே' பாட்டு பாடு குட்டின்னு சொன்னதும், அந்த இன்னிசை ராகம் ஆரம்பித்தது. ஒரு பாடல் கேட்க சுருதி, ராகம், சரியான பாடல் வரிகள் எல்லாம் இருந்தால் தான் கேட்க இனிமையாக இருக்குமோ என நினைப்பவர்களுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் பாடும் பாடல் தவறு என்று உணர்த்தும். அதையே லோக்ரஞ்சன் உறுதி படுத்துவது போல அழகாக பாடினான். லோக்ரஞ்சன் பிறந்த 2-3 மாதத்திலே இரவு தூங்குவதற்கு பாட்டு பாடினால் தான் தூங்குவான். அம்மா, அப்பா மற்றும் அக்கா என்னை பாட சொல்லுவார்கள். நான் பாடி அவன் தூங்கிய நாட்களை விட தூங்காத நாட்கள் தான் அதிகம். அவனுக்கு தொலைபேசியில் பதிவு செய்திருக்கும் பாட்டை போட்டு தூங்க வைப்போம். என் அப்பா மிக அருமையாக பாடுவார். ஆனால் பாட சொன்னால் லோக்ரஞ்சனுக்கு நான் பாடும் பழைய பாட்டு எல்லாம் பிடிக்காது என சொல்வார்கள். ஆனால் என் அப்பாவின் குரலுக்கு நான் என்றும் கேட்க விருப்ப படுவேன். என் அப்பா அடிக்கடி பாடும் பாடல் 'எங்கள் திராவிட பொன்னாடு' அல்லது 'செந்தமிழ் தென் மொழியாய்' கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அதை போல இனிமையும் மழலையும் கலந்து பாடும் லோக்ரஞ்சனின் குரலையும் கேட்க என்றும் எதிர்நோக்கி இருக்கிறேன்...

No comments: