Wednesday, March 31, 2010

அய்யனார் சாமி - வார்டனா ?

கடந்த இரு நாட்களாக கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். 28 ஆம் நாள் ஞாயிற்று கிழமை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றோம். அடுத்த நாள் காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி சென்றடைந்தோம். பின் அங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்தில் பயணம் செய்தோம். பங்குனி உத்திரம் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருசெந்தூர் வரை கால் கடுக்க நின்றே பயணிக்க வேண்டி இருந்தது. பின் அங்கிருந்து எங்கள் குல தெய்வம் செல்லபிள்ளை அய்யனார் கோவில் அமைந்துள்ள பரமன்குறிச்சி சென்றோம். இறை தரிசனம் பெற்று அங்கே வாழை மரம் நிழலில் தூங்கி எழுந்தேன். இறை வேண்டுதலுக்காக மொட்டை போட்டுக்கொண்டேன். நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டு இறைவனை குடும்பத்துடன் வேண்டி கொண்டேன். அடுத்த நாள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி முருகப்பெருமானை தரிசித்து வந்தோம். இரவு முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்காக அங்கிருந்து தூத்துக்குடி வந்தடைந்தோம். எனக்கான இருக்கை என் s9-38. என் முன்னாடி ஒரு நபர் அமர்ந்திருந்தார். அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். நானாக சென்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் பெயர் சின்னத்தம்பி. துணி தைத்து கொண்டு சென்னை மைலாப்பூரில் ஒரு கடை வைத்திருப்பதாக சொன்னார். எங்கே பொய் வருகிறார் என்று கேட்டதற்கு குல தெய்வம் கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன் என்றார். நான் அவரிடம் உங்கள் குல தெய்வம் என்ன என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் சற்று விநோதமாக இருந்தது. ஆம். அவர் குல தெய்வம் அய்யனார் என்று சொன்னார். கையில் அரிவாளுடன் காணப்படும் அய்யனார் என்றார் ..... நான் சரி என்று சொல்லும் முன்பே அவர் சொன்னார் அய்யனார் ஒரு வார்டன் சார் என்றார். வார்டன் என்றால் கல்லூரி விடுதியில் இருப்பவரை ஒப்பிட்டு சொல்கிறீர்களா என்றேன். அவர் சொன்ன பதில் ஆம் அய்யனார் உலகையே காக்கும் வார்டன் என்றார். சரி அதற்க்கு மேல் விளக்கம் கேட்டால் நான் நாத்திகன் என்ற முத்திரை குத்தப்படும் என்று நினைத்து என் கேள்விகளை எனக்குள்ளே வைத்து கொண்டேன். சரி அவர் சென்னையில் வசிக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு என்று கேட்டேன். அவரோ சென்னையில் சொந்த வீட்டில் வசிப்பதாக சொன்னார். சற்று ஆர்வ மிகுதியுடன். அவரிடம் எத்தனை வருடங்களுக்கு முன்னாள் எத்தனை லட்சங்களுக்கு வீடு வாங்கினீர்கள் என்றேன். அவர் சொன்னார் வருடம் 350 ரூபாய் மட்டும் தான் என்றார். எனக்கு ஒரு சந்தேகம் எழ ஆரம்பித்தது. ஒரு வேலை அந்த நபர் போதையில் இருக்கிறாரா என்று எனக்கு தோன்றியது. ஆனால் அப்படி தெரியவில்லை. பின் அவரே சொன்னார் அவருக்கு குடிசை மாற்று வாரியத்தால் அந்த வீடு இலவசமாக குடுக்க பட்டதாம். வருடம் ஒரு முறை மண் வரி என்றே பெயரில் 350 ரூபாய் கட்டினால் போதுமாம். எனக்கு தூக்கம் வந்ததால் அவரிடம் கை குலுக்கி விடை பெற்றுகொண்டேன். எனக்குள் இரண்டு கேள்விகள் மட்டும் நிலைத்து கொண்டது.... அய்யனார் வார்டனா ? இன்னொன்று இலவச வீடு சென்னையிலா ... ஒரு வேலை அவருக்கு அரசாங்கம் குடுத்த ஹமாம் கிரக பிரவேஷம் பரிசு திட்டத்தின் வெற்றியாளாரோ ? என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டேன். காலை கண் விழித்து பார்த்ததும் தாம்பரம் வந்தடைந்ததும் ரயில் பயணம் இனிதே முடிவடைந்தது. கடந்த இரு நாட்கள் நன்றாக இருந்தது.

Tuesday, March 23, 2010

என் இறை வேண்டுதலுக்கான காரணம்....

கடந்த சில நாட்களாக என்னிடம் பல நபர்கள் கேட்ட கேள்வி எதாவது காதல் தோழ்வியில் கஷ்டப்படுகிறேனா என்று? அவர்கள் கேட்டதற்கான காரணம் என்னுடைய தோற்றம். சவரம் செய்யப்படாத தாடி, அடர்ந்த முடி. இவை போதாதா நம் தமிழ் சினிமா கற்று கொடுத்த யூகங்கள். கடந்த மூன்று மாதமாக நான் முடி வெட்டவில்லை. அதை போல கடந்த ஒரு மாதமாக சவரம் செய்யப்படாத முகத்துடன் காணப்படுகிறேன். தாடி சற்று அதிகமாகவே என் முகத்தில் ஆக்கிரமித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு இறை வேண்டுதலுக்காகவே இந்த தோற்றம். வரும் திங்கள் கிழமை என் குலதெய்வம் கோவிலில் மொட்டை போடப்போகிறேன். வெயிலுக்கு சற்று இதமாகவே இருக்கும். சென்னையில் வெயில் வாட்டி கொண்டிருக்கிறது. இந்த இறை வேண்டுதலுக்கான காரணத்தை எழுத நினைக்கிறேன். கடந்த வருடம், ஜூலை மூன்றாம் தேதி நான் தவறி விழுந்ததில் என் முன் பல்லில் பலத்த காயம் ஏற்பட்டது. என் குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்ணீரையும் பார்த்த நாள். அவர்கள் மேலும் கஷ்ட படகூடாது என்பதற்காக என்னில் இருந்த வழியை யாரிடமும் காட்டவில்லை. என் அக்கா அழுததை பார்த்து எங்கள் வீட்டு செல்ல பிள்ளை லோக்ரஞ்சன் அழுததை நினைத்தால் இப்பொழுது கூட மனம் கஷ்டப்படும். என் அக்கா என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். முதலில் சென்ற பல் மருத்துவமனையில் பல்லை எடுத்தாக வேண்டும் என்று சொன்னதும் என் அக்கா தேம்பி தேம்பி அழுதாள். சரி வேறு வழி இல்லாமல் நான் சம்மதம் தெரிவித்தேன். சரி நிலைமையை என் அத்தானிடம் சொன்னதும் அவர்கள் செங்கல்பட்டிலிருந்து தியாகராய நகரில் உள்ள மருத்துவமனைக்கு கிளம்பி வந்தார்கள். என் அத்தான் வரும் வரை காத்திருப்போம் என்று நானும் அக்காவும் முடிவு செய்தோம். முதலுதவியாக ஒரு ஊசி மட்டும் போட்டனர். மீனாக்ஷி பவனில் மதிய உணவை நானும் அக்காவும் சாபிட்டோம். உண்மையில் என்னால் சாப்பிட கூட முடியாத அளவு வலி. இருந்தாலும் என் அக்கா முன்னாடி அதை காட்டிக்கொள்ள கூடாது என்று நினைத்தேன். நான் எப்படி கஷ்டபடுகிறேன் என்று அவளால் உணரமுடிந்தது. என் அத்தானும் வந்து சேர்ந்தார்கள். மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்பு என் அத்தான் பல்லை அகற்றாமல் மருத்துவம் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் முடியாது என்று மறுத்துவிட்டார். சரி என் அத்தான் இன்னொரு மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு முயற்சி செய்யலாம் என்று சொன்னவுடன், என்னை அழைத்து கொண்டு சென்று அந்த மருத்துவரை பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த மருத்துவர் ஆந்திர எல்லையில் இருக்க கூடிய சித்தூரில் இருக்கிறார். சென்னையில் இருந்து பயணம் செய்தால் குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஆகும். இடையில் அப்போல்லோ பல் மருத்துவமனை விளம்பர பலகையை பார்த்தோம். நேரம் ஆக ஆக என் பல் கீழே விழுவது போலவே எனக்கு தோன்றியது. என் உதடுகள் எல்லாம் வீங்கி வறண்டு இருந்தது. சரி அப்போல்லோ பல் மருத்துவமனையில் தலைமை மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என்று முடிவு செய்து அங்கே சென்றோம். தலைமை பல் மருத்துவர் பெயர் தரிதா ராம். அவர் வேறு ஒருவருக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்ததால் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவர் பெயர் நமீதா. அவரும் எக்ஸ்ரேயை பார்த்து விட்டு பல்லை அகற்றுவது தான் ஒரே வழி என்றார். என் அத்தான் தலைமை மருத்துவரையும் ஒரு முறை பரிசோதித்து சொல்ல அந்த மருத்துவரிடம் கேட்டதும், தலைமை மருத்துவர் வந்து பரிசோதித்து முயற்சி செய்யலாம் என்றார். பல்லில் பின்னல் உள்ள சதை வலிமையுடன் இருப்பதாக சொன்னார். உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று கட்ட சிகிச்சைக்கு பின்பு, எனது முன் பல் சரி செய்யப்பட்டது. இப்பொழுது மருத்துவ ஆலோசனைப்படி முன் பல்லில் ரொம்பவும் கடினமான அழுத்தம் குடுக்காமல் பழகிக்கொண்டேன். நான் அந்த தலைமை மருத்துவர் தரிதா ராமிற்கு என்று கடமை பட்டவன். அந்த மருத்துவரிடம் உள்ள நல்ல குணம், எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்று பேசுவார். அந்த தருணம் மட்டும் என் அத்தான் மருத்துவமனைக்கு வராமல் இருந்திருந்தால், என் முன் பல் அகத்ற்ற பட்டு செயற்கை பல் பொறுத்த பட்டிருக்கும். எல்லாம் நல்ல படியாக முடிந்ததற்காக தான் இந்த இறை வேண்டுதல்.

Saturday, March 20, 2010

தமிழக பட்ஜெட் - சிறு கண்ணோட்டம்

தமிழக பட்ஜெட் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் வரி இல்லாத பட்ஜெட். சிறு மீனை போட்டிருக்கிறார்கள் திமிங்கலத்தை தன வலையில் வீழ்த்த. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத ஒரு அம்சம் இன்னும் 44 லட்சம் இலவச தொலைக்காட்சிகள் விநியோகிக்க பட உள்ளனவாம். எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படுகிறது என்று புரியவில்லை. வசதி இல்லாதோருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் ஐந்தாடுகளில் கணக்கெடுத்து பார்த்தால் (4400000*5) சுமார் இரண்டு கோடிகளுக்கு மேல் இந்த இலவச தொலைகாட்சி அளிக்கபட்டிருக்கிறதா ? அப்படி எடுத்துக்கொண்டால் சுமார் 8 கோடி மக்கள் தொகையில், இரண்டு கோடி நபர் வசத்தில் இல்லாதவரா ? நான்கில் ஒருவன் வசதி இல்லாதவன் என்றால் அவன் வாழ்க்கை தரத்தை இந்த அரசாங்கம் எப்படி முன்னேற்றியிருக்கிறது. மக்களை சோம்பேறிகளாக ஆக்கியுள்ளது என்று தான் எனக்கு தோன்றுகிறது. நாளொன்றுக்கு 50000 ரூபாய் வருமானம் ஈட்டும் கடைகளில், கேமரா கண்காணிப்பதற்கு இந்த இலவச தொலைக்காட்சிகள் பயன்படுத்த படுகிறதை நான் பார்த்திருக்கிறேன். இந்த இலவச தொலைகாட்சி வழங்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன ? அடுத்த முறையும் தாங்களே அரியணையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது இந்த பட்ஜெட். இலவசங்களை அள்ளி தெளித்திருகிறார்கள். மூவாயிரம் கோடி பற்றாகுறை ஏற்படுமாம். ஏன் இப்படி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்க்கு என்ன அவசியம் ? இன்னும் ஓரிரு மாதங்களில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும். டீலக்ஸ் பேருந்து சாதாரண பேருந்துகளாக மாற்றப்படும். காசை வாங்கி ஓட்டை போடும் நிலை இன்று முளைத்துள்ளது. சில ஆயிரங்களுக்கு மனிதர்கள் இங்கே தன சுய உரிமையை இழக்கின்றான். இப்படி இருக்கும் தருவாயில் இந்தியா எங்கே முன்னேற போகிறது. தமிழகத்தில் ஒரு ஆளும் கட்சி உறுப்பினரும் எதிர் கட்சி உறுப்பினரும் சந்தித்து கொள்வதே கிடையாது. வேட்பாளர் ஒருவன் மற்றொருவரை அடையாறிலே எதிர்த்து பிரச்சாரம் செய்தால் , அந்த வேட்பாளர் இவரை தாம்பரத்தில் விமர்சனம் செய்வார். அமெரிக்காவிலே எதிரெதிர் ஜனாதிபதி வேட்பாளர் கூட மக்கள் மன்றம் முன்பு கூடி தங்கள் கொள்கைகளை விளக்கி கூறுவர். மனிதனே, சில ஆயிரத்திற்கு உன்னை விற்று உன் சுதந்திரத்தை இழக்காதே.

Wednesday, March 17, 2010

கைத்தறி பொருள் காக்க வேண்டும்.

ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் திருப்பூர் நகரம். திருப்பூர் ஏற்றுமதி குழுமம் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. நலிந்து வரும் கைத்தறி ஆடை தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, தமிழக அரசு தன கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வாரம் ஒரு முறையாவது கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். இந்த நடைமுறை கேரளாவில் பின்பற்ற படுவதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இன்றைய ஆண் தலைமுறையினர் வேஷ்டி உடுத்த கற்று கொள்வதே தன திருமண தினத்தில் இருப்பதாக தோன்றுகிறது. தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதி குழுமத்தின் கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில், நலிந்து வரும் கைத்தறி தொழிலை காப்பற்ற்வதர்க்கு வழி கிடைக்கும். என் மாமா ஒரு கைத்தறி தொழிலாளி. அவர்களுக்கு சம்பளம் வாரம் ஒருமுறை. வாரம் ஒன்றுக்கு அதிக patchஅம ஆயிரம் ரூபாவை தாண்டாது. எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த வருமானத்தில் எப்படி தான் குடும்பம் நடத்துகிறார்களோ என்ற கேள்வி எனக்குள் பலமுறை எழுந்ததுண்டு. வருடம் ஒரு முறை தர்ணா என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படும் சம்பள உயர்வை கேட்டு. ஆனால் கைத்தறி கடை சில நாட்கள் மூடப்படும். பின் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டு அழைக்கபடுவர் ஒரு சிறு சம்பள உயர்வாக இருக்கலாம் இல்லை பழைய சம்பளத்துக்கே திரும்ப அழைக்கபடுவர். இப்படி பட்ட தொழிலாளர் நலனுக்காவது நாம் கைத்தறி பொருள்களை உபயோகிக்க நம்மை தயார் செய்ய வேண்டும்.

Saturday, March 13, 2010

IPL 2010 முதல் போட்டி - Deccan Chargers Vs Kolkota Knight Riders

எதிர்பார்ப்புகளுக்கு என்றுமே குறைவில்லாத IPL கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் இத்தொடரில் பெரும் தோழ்விகளையே கண்டுள்ளது. கடந்த ஆண்டு பயிற்சியாளராக இருந்த புச்சாணனை தூக்கி விட்டு தேவ் வாட்மோரை இந்த ஆண்டு பயிற்சியாளராக்கியது. பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம்மை நியமித்திருந்தது. டாசில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரின் முதல் பந்தை சமிந்த வாஸ் வீச மனோஜ் திவாரி எதிர்கொண்டார். ஷாருக் கானிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் முதல் பந்திலயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் திவாரி. அடுத்து இறங்கிய சௌரவ்வும் தனது ரன் கணக்கை துவங்காமலயே பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரின் இறுதியில் வாஸ் ஒரு ரன் மட்டுமே விட்டு கொடுத்து இரண்டு விக்கெட்டை எடுத்தார். அடுத்து வந்த பேட்ஸ்மென்களும் விக்கெட்டை இழந்தனர். 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் நான்கு விக்கெட்களை இழந்திருந்தனர் நைட் ரைடர்ஸ் அணியினர். அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு களத்தில் இருந்த ஒவைஸ் ஷாஹ் மற்றும் ஏஞ்செலோ மேதிவ்ஸ் ஈடுபட்டனர். நிதானமாக ஆட்டத்தை துவங்கிய இருவரும் பின் அதிரடியில் மிரட்ட டெக்கான் சார்ஜர்க்கு 162 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிரடியாக துவக்கியது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. லக்ஷ்மணனும் தன பங்களிப்பை பதிவு செய்தார். கில்க்ரிஸ்ட் அதிரடியாக விளையாட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு வெற்றி உறுதி என்றே தோன்றியது. லக்ஷ்மணன் தனக்கு பரிச்சயமே இல்லாத ஷாட் ஆட நினைத்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிப்ஸ் அடித்து விளையாடினார். இடையில் கில்க்ரிஸ்ட் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்பினை நைட் ரைடர்ஸ் அணியினர் தவற விட்டனர். கில்க்ரிஸ்ட் அரை சதம் கடந்த நிலையில் தவறான பந்தை பவுண்டரிக்கு அடிக்க நினைத்து திவாரியிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை பறி கொடுத்தார். பின் கிப்ஸ், சைமண்ட்ஸ், ரோஹித், அனிருத் என அனைவரும் தவறான பந்தில் தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். போட்டி விருவிருப்பாகியது. கடைசி கட்டத்தில் 30 பந்தில் 40 ரன் எடுக்க வேண்டியிருந்தது. இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த், சார்ல்ஸ் லாங்க்வெல்ட், மேதிவ்ஸ் வெற்றியை நைட் ரைடர்ஸ் அணிக்கு தேடி தந்தனர். அணி வெற்றியில் ஷாருக் நிம்மதி அடைந்திருப்பார்.


ஆட்ட நாயகன் : ஏஞ்செலோ மேதிவ்ஸ்
அதிக 6 அடித்தவர் : ஏஞ்செலோ மேதிவ்ஸ்
சிறப்பான கேட்ச் : ஹெர்ஷெல் கிப்ஸ்

Tuesday, March 9, 2010

7/G ரெயின்போ காலனி படம் பார்த்த அனுபவம்.

கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு நடந்து கொண்டிருந்த நேரம். 2004 ஆம் ஆண்டில் வெளியானது செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த 7/g ரெயின்போ காலனி திரைப்படம். தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடித்த படம். நான், கேசவன், லக்ஷ்மணன், பாண்டியராஜா, ரவி, கோபால்(மச்சான்), விஜி, மாரிசாமி என்று ஒரு கூட்டமா தான் கல்லூரியில இருப்போம். ஆனால் இந்த கூட்டத்தில் எங்க பாத்தாலும் வெளியில சுத்துறது நான், லக்ஷ்மணன், கேசவன், பாண்டி, கோபி, விஜி பெரும்பாலும் இருப்போம். நாங்க எங்க வெளில சுத்துனாலும் தங்குறது எங்க வீடு, லக்ஷ்மணன் வீடு, கேசவன் மற்றும் பாண்டி வீட்ல தங்குவோம். அப்படி தான் ஒரு நாலு லக்ஷ்மணன் எங்க எல்லாரையும் விருதுநகர்ல உள்ள ஒரு அனாதை இல்லத்துல அவன் நண்பன் ராஜ்குமாரோட அம்மா ஒரு வேளை அங்கிருக்கிற ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக இருந்தது. அவங்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உதவிக்காக நாங்க அங்க சென்றோம். எனக்கு தெரிஞ்சு முதல் தடவையா ரவி எங்களோட வந்திருந்தான். சாயுங்காலம் வரை அந்த ஆதரவற்ற இல்லத்தில் இருந்து அங்கே உதவி புரிந்தோம். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் லக்ஷ்மணன் வீட்டிற்கு திரும்பினோம். நாங்கள் அடிக்கடி லக்ஷ்மணன் வீட்டில் தங்கி இருக்கிறோம். எங்களுக்கு என்றே கீழ்தளத்தில் தங்குவதற்கு என்று ஒரு அறை இருக்கும். இரவு நேரம் நெருங்கும் பொழுது படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்பொழுது தான் 7/G ரெயின்போ காலனி படம் வெளியாகி இருந்தது. ஆனால் விருதுநகரில் எந்த திரையரங்கிலும் படம் திரையிடவில்லை. அருப்புகோட்டை ராணி திரையிரங்குக்கு போகலாம் என்று முடிவு செய்து அனைவரும் கிளம்பினோம். மொத்தம் 7 நபர் மூன்று வண்டிகளில் போனோம். படம் திரையிடபோவதர்க்கு பத்து நிமிடம் முன்பாகவே 30 கிலோமீட்டர் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டோம். ரவி டிக்கெட் எடுப்பதற்கு அனுப்பி வைத்தோம். ரவி அங்கே பாக்ஸ் 7 டிக்கெட் கேட்க, அது இந்த திரையரங்கில் கிடையாது, வேணும்னா deluxe டிக்கெட் போடவான்னு கேட்க சரி என்று சொன்னதும், எங்கள் 7 பேருக்கும் deluxe டிக்கெட் கொடுக்கப்பட்டது. நாங்க திரையரங்கில டிக்கெட் கிழிக்கரவண்ட டிக்கெட் குடுத்ததும், 'சார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாங்க ரெடிபன்னிகிரோம்னு சொல்லிட்டு இன்னொரு நபரிடம் deluxe டிக்கெட் 7 ரெடி பன்னுப்பனு யாருக்கோ கட்டளையிட்டார்'. எங்களுக்குள் ஒரு கேள்வி deluxe டிக்கெட் எப்படி இருக்குமோனு. எங்கள் என்ன ஓட்டம் மனதில் இருந்து விலகுவதற்குள் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். எங்களுக்கு அதிர்ச்சி deluxe இருக்கையை பார்த்ததும். கடைசி வரிசையில் ஆளுக்கொரு supreme நாற்காலி இருந்தது. ஒரு மின்விசிறி கூட கிடையாது. தலைக்குமேலே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்களா என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் அன்று நிறைவேறியது. படம் பார்க்க வந்த பாதி பேர் எங்களை பார்த்து விட்டு சென்றனர். எங்களுக்குள் அடக்க முடியாத சிரிப்பு இப்படி ஏமாந்து விட்டோமே என்று. படம் ஆரம்பமானது....நல்ல படியாக படம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். விருதுநகர் ஊர் எல்லை வரை எந்த பிரச்சனை இன்றி வந்தோம். சரி இனிமேல் மெயின் ரோட்டில் வந்தால் போலீஸ் பிடிப்பார்கள் என்று விருதுநகர் தெரு சந்துக்குள் வந்து கொண்டிருந்தோம். ஆனால் எங்களை மூன்று இடத்தில போலீஸ்காரர்கள் பிடித்து விசாரித்தனர். எங்களை விசாரித்த நேரம் மணி நள்ளிரவு ஒன்று இருக்கும். எங்கே போயிட்டு வரீங்கடனு கேட்டதுக்கு படத்துக்கு போயிட்டு வர்றோம் சார்னு சொல்லிகொண்டிருக்கிருப்ப, போலீஸ்காரர் எங்களுக்கு இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் வெளில சுத்தகூடாதுன்னு அட்வைஸ் பண்ணத கேட்டுட்டு அங்க இருந்து கிளம்பி லக்ஷ்மணன் வீட்டை வந்து அடைந்தோம். பின்ன கொஞ்ச நேரம் நடந்ததை எல்லாம் சிரிச்சு பேசி அப்படியே தூங்குனத மறக்க முடியாது. இப்போதும் deluxe என்கிற வார்த்தையா பார்க்கும் போதே, இல்ல படிக்கும் போதோ அந்த திரையரங்க அனுபவம் மனசுக்குள்ள நிழலாடும்.

என் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

முதலில் என் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நான் இன்று வாழ்க்கையில் ஓரளவிற்கு சந்தோசமாக வாழ்வதற்கு ஆதாரமே என் அம்மா மற்றும் என் அப்பாவினால் தான். என்னுடைய சிறு வயதில் என் காலில் கட்டி மாதிரி இருக்கும். நடப்பதற்கு மிகவும் கஷ்ட படுவேன். ஆனால் விளையாட்டு என்றால் மட்டும் அந்த ஏரியாவில் இருக்கும் பழனி, விஜி, செந்தில், ரமேஷ் (எல்லோரும் என்னை விட வயது கூட உள்ளவர்கள்) அண்ணன்கள் கூட சென்று விளையாடுவேன். விளையாட்டின் நடுவே என் அம்மா என்னை கண்டித்து கூட்டி சென்று விடுவார். நான் நடக்க கஷ்ட படுவேன் என்பதற்காக என்னை பள்ளிக்கூடம் வரை என் அம்மா என்னை தூக்கி கொண்டு செல்வார். அது போல மணி 12:15 நெருங்கும் பொழுது பள்ளியறை வாசல் கதவருகே என் அம்மாவின் முகம் பளிச்சென்று தெரியும். எனக்காக மதிய உணவை ஊட்டுவதற்காக வந்திருப்பார். அது போல சாயுங்காலம் பள்ளி முடியும் நேரம் என் அம்மா வந்தது என்னை சுமந்து கொண்டு செல்வார். பின்னர் மாரிமுத்து சார் டியூஷன் செல்லும் பாதை வரை என் அம்மா என்னை சுமந்து கொண்டு கூட்டி செல்வதை என்னால் என்றும் மறக்க முடியாது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். சில நாட்கள் கழித்து பாலகிருஷ்ணன் என்றொரு மருத்துவர் என் காலில் இருந்த கட்டி மாதிரி இருந்ததற்கு காரணம் வைட்டமின் குறைபாடு என்று சொல்லி ஒரு மருந்து கொடுத்தார். பின்பு அந்த காயம் முழுவதும் குணமானது. நான் +2 படிக்கும் பொழுது அதிகாலை எழுந்து படிக்கையில் , என்னுடன் என் அம்மாவும் விழித்து கொண்டு நான் சோர்வாக இருக்கும் நேரத்தில், காப்பியும் எதாவது சாப்பிட குடுப்பார். பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி காலமும் முடிந்தது. நான் வேலை தேடிய நாட்களில் நான் பல முறை தோல்வி அடைந்தாலும், என் அப்பா மற்றும் என் அம்மா எனக்கு ஆறுதல் வார்த்தை கூறி என்னால் முடியும் என்று ஒரு வார்த்தை சொல்வர். கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஒரு வேலை கிடைத்தது. அதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் முடிந்தாகிவிட்டது. எனது இந்த சந்தோசமான வாழ்க்கைக்கு அடித்தளம் இட்ட என் அம்மா மற்றும் என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்ல வேண்டும். இந்த தருணத்தில் என் அம்மாவிற்கு இந்த வலை குறிப்பின் மூலம் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Monday, March 8, 2010

மனதுக்கு ஆறுதல் தந்த ஒரு பயணம்

கடந்த மாதம் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்கு தூத்துக்குடி சென்றிருந்தேன். செவ்வாய் கிழமை இரவு முத்து நகர் ரயிலில் பயணம் செய்தேன். வெள்ளி கிழமை ஒரு கல்யாணத்திற்கும் செல்ல வேண்டி இருந்ததால் குறைந்தது மூன்று நாட்களாவது விடுமுறை எடுத்தாக வேண்டும். சற்று நினைவு கூர்ந்து பார்த்தால், சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாவது இருக்கும் நான் வளர்ந்த ஆலங்குளத்திற்கு சென்று. சரி எப்படியாவது ஆலங்குளம் சென்று விட வேண்டும் என்று ரயில் பயணத்தின் நடுவே திட்டமிட்டு கொண்டேன். புதன் கிழமை விடியல் தோன்றியது. ஏனோ மனதிற்குள் ஒரு சந்தோசம் வட்டமிட்டு கொண்டு இருந்தது தென் தமிழகத்தை பார்க்கையில். முள் நிறைந்த வேலி மரம் அழகாய் தெரிந்தது. ரயில் தூத்துக்குடி சென்றடைந்தது. ஒரு ஆட்டோ பிடித்து நானும் என் நண்பன் கோபாலும் ஹோட்டல் ஆல்வின் சென்றோம். அங்கே சக நண்பர்கள் ஏற்கனவே தங்கி இருந்தனர். பின் அனைவரும் கிளம்பி நண்பரின் கல்யாணத்திற்கு சென்று, எங்கள் வருகையை பந்தியில் பதிவு செய்தோம். கல்யாணம் நன்றாக நடந்து முடிந்தது. பின் நான், மாரிசாமி மற்றும் கோபால் சிவகாசி செல்லும் பேருந்தில் கிளம்பினோம். நானும், மாரிசாமியும் கோவில்பட்டியில் இறங்கினோம். நான் ஆலங்குளம் செல்ல வேண்டும் என்பதற்காக தாமரை பேருந்திற்காக காத்திருந்தேன். அதே பேருந்தில் தான் கல்லூரி நாட்களில் நானும், செந்திலும் காத்திருந்து வெம்பகோட்டையில் இருந்து பயணம் செய்வோம். ஒருவாறாக பேருந்து ஆலங்குளம் வந்தடைந்தது. நான் அடிக்கடி வடை சாப்பிடும் சங்கரேஸ்வரி டீ ஸ்டாலில் ஒரு டீயும், இரண்டு வடையும் சாப்பிட்டேன். ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அங்கு கூடம் மட்டும் குறையவே இல்லை. முன்பு நான் ஆலங்குளத்தில் இருந்த காலத்தில், ஸ்டேஷன்ன்றி பொருள்களை லட்சுமி ஸ்டோர்ஸ்ல வாங்குவேன். அந்த கடை காரர் என்னிடம் நன்றாக பேசுவார். ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதே, என்னை அடையாளம் தெரியாது என நினைத்தேன். அவர் சரியாக என்னை கண்டுபிடித்து, தம்பி எப்படி இருக்கிறீங்க ? அப்பா எப்படி இருக்கிறாங்கன்னு கேட்டார். சென்னையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் 'ஏய் எப்படி இருக்க' என்று ஒருமையில் தான் வரவேற்ப்பு இருந்திருக்கும். இங்குள்ள மக்கள் இப்படி பழகி விட்டனர் இதை தவறு என்று எடுக்கவில்லை. சரி நான் தங்கி இருந்த சிமெண்ட் ஆளை குடியிருப்பிற்கு போகலாம் என்று நினைத்து பேருந்திற்காக காத்து கொண்டிருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் ராதா அத்தையை (அவர்களது மகன் பெயர் ராதாகிருஷ்ணன்) எதேச்சையாக பார்த்தேன். நானாக சென்று அவர்களிடம் அறிமுக படுத்திகொண்டேன். ஏனன்றால் அவர்களை பார்த்து ஒரு பத்து வருடமாவது இருக்கும். அவர்கள் என் கன்னத்தை கில்லி விட்டு (பாசத்துடன்) எப்படி செல்வம் இருக்க என்று கேட்டாங்க. ரொம்ப சந்தோசமாக இருந்தது. சரி என்று அவர்களிடம் விடை பெற்று கொண்டேன். நான் ரொம்ப நேரமாக காத்து கிடந்த பேருந்து வந்ததும் வேகமாக சென்றேன். ஆனால் ஒரு அதிர்ச்சி செய்தி என்னவென்றால் பேருந்து சிமெண்ட் ஆலை குடியிருப்புக்கு போகாது. நான் சென்று பேருந்து ஓட்டுனரிடம் காரணம் கேட்டால், அவர் சொன்ன பதில் 'அங்க ஏற கூடிய ஒன்று அல்ல ரெண்டு பேருக்கெல்லாம் வண்டி உள்ள போகாது சார்' என்று சொன்னார். நான் அங்கே தங்கியிருந்த காலத்தில் சுமார் நானூறு குடும்பம் இருக்கும். அந்த காலனியை கடக்கும் பொது எங்கும் கல கலப்பாய் இருக்கும். சரி என்று அதே பேருந்தில் பயணம் செய்து ராஜபாளையம் பயணமானேன். போகும் வழியில் பிரமிப்பாய் இருக்கும் சிமெண்ட் ஆலை சிம்னியை பார்க்கும் பொழுது மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அருமையான பயணம். அடுத்த முறை செல்லும் பொழுது கட்டாயம் சிமெண்ட் ஆலை குடியிருப்பிற்கு செல்ல வேண்டும் என்று மனதில் சொல்லி கொண்டே இங்கே எழுதுகிறேன்.

Thursday, March 4, 2010

மன அழுத்தம் தான் காரணமோ ?

நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு எனது கிறுக்கள்களை தொடர்கிறேன். கடந்த சில நாட்களாக ஏதோ ஒரு நினைவு என்னை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் என்னில் இருந்த ஒரு தைரியம் மற்றும் துணிச்சல் கொண்ட ஒருவன், எனக்குள் இப்பொழுது இருக்கிறானா என்று தேடுகிறேன். நான் வேலை தேடிய நாட்களில் தோல்விகளை கண்டு துவளாத மனம், இப்பொழுது ஏன் புது முயற்சிகளை எடுக்க தவிக்கின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் தோல்விகளை தாங்கி கொள்ளும் மனம் என்னிடம் மறைந்து விட்டதா? நடப்பவைகளை நினைவு கூர்ந்தால், எனது எதிர்காலம் !(இந்த ஆச்சர்யகுரிதானா ?). ஒரு வேலை விடா முயற்சி குணத்தை கை விட்டுவிட்டேனா ? எனக்குள் இருக்கும் சுமை தான் காரணமோ ? கேள்விகள் பல இருக்க விடை மட்டும் இன்னும் கிடைக்க பெறவில்லை.